Skip to main content

சொனாட்டா - ஆண்களுக்காக ஒரு புத்தகம்

பாலுவின் சொனாட்டாவை வாசித்து முடித்தேன். இன்று நவீனத்துவம் பூதாகரித்திருக்கும் சூழலில் அது அதன் உபவிளைவுகளுடனே வருகிறது. உலகெங்கும் ஆண்மையின் அல்லாட்டங்களை இன்று  பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் சந்திக்கும் உளவியல் சார்ந்த, அடையாளம் சார்ந்த அலைக்கழிவை, அவனின் தன்னிரக்கத்தை, அவனின் சோர்வை, அவன் வீழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பதை, விழுந்தவுடனும் வீழ்த்தப்பட்டவுடனும் அவன் தன்னுள்ளே பொதிந்து சுருங்கி மனக்குமுறலை பொருவாய்கொண்டு கொப்பளிப்பதை, சிலர் தள்ளி நின்று நகைத்தும், சிலர் அவன் மேல் கற்களை வீசியும், சிலர் அவனை ஆதாயப்படுத்திக்கொண்டும், சிலர் புரிந்துக்கொண்டும் கருணைக் கூர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு வரலாறு முழுவதும் ஒரு பருவத்தில் அவர்களுக்கென ஒரு அலைக்கழிவுச் சூழல் உண்டு. தத்தளிப்பு உண்டு. அதனால் அவன் வழித்தவரலாம் தறிக்கெட்டுப்போகலாம். சமூகத்துக்கு உதிரியாகி நிலச்சுமையாகலாம். தன்னையும் தனக்கானதையும் முன்நின்று பொறுப்பேற்று எடுத்துக்கொண்டு நடத்ததெரியாத மந்தமாகலாம். காமம், போதை, சூதாட்டம் மற்றும் கழிவிறக்க வன்முறை போன்ற பல களியாட்டங்களில் மனம் செலுத்தி ஆன்ம கழிவுச் சுமைகளை மூளை பீடத்திலேற்றி நச்சாக்கலாம். இனப்பெருக்கத்திற்கு முந்தி வெற்றித்தோல்விகளை அடைந்து வெறியுணர்வாகலாம். இது தன்னியல்பாய் நிலைப்பெற்று ஓடும் சமூகத்துக்கு இழுக்கு. உதிரி ஆண்களால் சமூகத்தை குடும்பத்தை பேணி ஒன்றை பொறுப்புணர்வுடன் பாதுகாத்துக்கொள்ள தெரியாது. இச்சை திசை உடலை உந்துதல் தன்னளவிலும் சமூக அளவிலும் ஆண்களுக்கு இழுக்கென்றே எல்லா கலாச்சாரங்களும் உணர்ந்தேயிருந்தனர். ஆண்களுக்கு தன்னிலையை ஒழுங்குபடித்திக்கொள்ள சமூக கூட்டுறவுடன் ஒன்றிவாழ அவனுக்கு கடிவாளம் தேவையாகிறது. அந்த கடிவாளம்தான் ஆண்மை என்ற அடையாளத்தில் ஏற்றுப்பட்டிருப்பது.
எல்லா வகை ஆண்மைத் தன்மையிலும் ஏற்றப்பட்டுள்ள பொதுக்கூறு உணர்வுகளை கட்டுப்படுத்துதல். மனம் சமநிலை பேணுதல். உடல் கட்டி உறுதியாக்குதல். பொறுப்பை ஏற்றல்.

உயிரியல், உளவியல், பண்பாடு மேலடுக்கின் விகிதாச்சார அடிப்படையில் பங்கீடுகளை கொடுத்து அவர் அவர் சமூகங்களுக்கான ஆண்மையை ஆண்களிடத்திலிருந்து சமூகங்கள் பெற்றுக்கொண்டனர். வரலாறு எங்கிலும் ஒரு ஆண் என்றால் அவன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பண்பாடுகளும் இதுவரை வந்த கலாச்சாரங்களும் முன்கூட்டையே சில வழிமுறையை வகுத்தே வைத்தனர். அதில் அவன் தன்னை தகுதிப்படுத்திக்கொள்வதும் அதன் மூலமாக தன் சமூக இருப்பை நிச்சயப்படுத்திக்கொள்வதும். பெண் கொண்டு பிள்ளைப்பெற்று பொருளீட்டி  குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தன்னை ஓப்படைத்து தனக்கென நிச்சயமான உறவுகளை சேமித்துக்கொள்வதுமென. அவன் ஒரு அர்த்தமுள்ள சராசரி ஜீவிதத்தை கழித்து முடிக்க உத்வேகித்தன. உண்மை, சில நேர்த்தியான ஆண்களுக்கே ஆண்மையை நிருப்பிக்க முடியாமலிருந்திருக்கும். சிலவைகள் மிகக்கடினமான ஆண்மைத்தன்மையை கோரும். சிலவைகள் காத்திரமான சடங்காச்சாரியங்களையும் வதைகளையும் திணிக்கும். அவைகளை சகித்தும் நிரூபித்தும் வென்றும் ஆண்மையின் நிமிர்வால் உடல் மிளிர்ந்து தன்னை பிறிதொன்றுக்காய் ஒப்புவித்து அதை உயர்த்தி நிமிர்த்தி ஆண் வாழ்ந்து காட்ட எத்தனிப்பான். அது அந்த அந்த சமூகம், கலாச்சாரம், சூழல், நிலம், சமய‌ம், நம்பிக்கை இத்தியாதிகள் மூலமாக தன்னை வடிவமைத்துக்கொண்டாகக்கூடிய செயல்பாடு மற்றும் வாழ்வு. இதில் சில நிறைக் குறைகள் உண்டுதான். ஆனால் வரலாற்றின் எந்த காலக்கட்டதிலும் ஆண்மை என்னும் அடையாளத்திற்கு பங்கம் வந்ததில்லை. அது அவன் அடையாளம் சார்ந்த அலைக்கழிவை, சிதைவை உண்டாக்கவில்லை. இன்று ஒரு ஆண் தன்னை ஒரு ஆணான வெளிக்காட்டிக்கொள்ள அஞ்சுகிறான். ஆண் என்னும் அடையாள ஏற்பு இன்று என்னவாக இருக்கிறது என்று அவனை சமூகம் குழப்புகிறது. ஆண்மை என்ற பதமே அவனை ஆங்காரமானவனாக, தறிக்கெட்டவனாக, பெண்களை அவமதிப்பவனாக, அடிமைப்படுத்துபவனாக, கொலையாளியாக சித்தரிக்கிறது. ஒரு ஆண் அழலாம், சிதையலாம் மென்னுணர்வுக்கொண்டு தடுமாறலாம் அதை இன்று பொதுமைபடுத்திவிட்டோம். அது ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிலிருந்த தன்னை மீட்க தன்னை மீண்டும் நிலைநிறுத்த ஒரு சமூகமாக என்னத்தை அவனின் அந்த ஆண்மைக்கான பதிலீடாக நாம் வைத்தோம். பண்டைய பிரச்சினைக்கான தீர்வாக முன்வைத்து தளர்வாதம் பேசி அவனை வழிக்கெட்ட குருடனாக்கியிருக்கிறோம் . இன்று ஆண் தறிக்கெட்டவனாகியிருக்கிறான். ஊசலாடுகிறான். அதில் சிலர் மீள்கிறார்கள். சிலர் மடிகிறார்கள். ஆரோக்கியமான ஒரு அடையாள ஏற்பு இல்லாமல் போலியான நச்சு அடையாளங்களை சுமந்து சமூக அமைதி நிலையை உலுக்கி பெருங்கேடு விளைவிக்கிறான். பெண்களை துன்புறுத்துகிறான். குற்றம் செய்கிறான். போதையடிமையாகிறான். வன்முறை ஏந்துகிறான். சீரழிகிறான். இறுதியில் இதுதான் ஆண்மை, இதுதான் ஆண்கள் என்னும் பொதுமைபடுத்தலுக்குள் கூனிக்குறுகி நிற்கிறான். 

இந்த சிக்கலை உலகமின்று கண்டிருக்கிறது. உண்மையில் ஆண்மை என்றால் என்ன. வரலாறு எங்கிலும் சமூகம் அதை எப்படிப் பார்த்தது. அதை நாம் இன்று சரியாகத்தான் புரிந்துக்கொண்டிருக்கிறோமா என்பவைகளை குறித்து அறிஞர்கள் விவாதித்தும் தீர்வுகளை எடுத்துக்கொண்டும் வருகிறார்கள். அச்சிந்தனைகளின் தொகுப்பாக இந்த புத்தகமிருந்திருந்தால் எனக்கிது பத்தில் ஒன்றாக சென்றிருக்கும். இதில் அச்சிந்தனைகளின் சுவடுகள் நிறைய உண்டு. ஆனால் அவை எல்லாம் ஒருவனின் வாழ்வனுபவமாக வெளிப்படும்போது அது ஒரு நன் கோணத்தை கொடுக்கிறது. இது சமக்காலத்தில் ஆண் சந்திக்கும் பிரச்சினைக்களான காமம், காதல், போதை, வெறுமை, தளர்வு, சோர்வு என ஊசலாடும் உணர்வுகளை எப்படி அவன் கட்டுக்குள் கொண்டு வந்து மீட்டுக்கொள்கிறான் என விரிகிறது. பாலு அவர் வாழ்வனுபவங்களிலிருந்து பெற்றுக்கொண்ட கதையாகவும் இதை சொல்கிறார். இதில் சில விடுபடல்கள் இருக்கலாம். உதாரணமாக நான் மேல் குறிப்பட்ட ஆண்மை என்னும் அடையாளம் சார்ந்த சிக்கலை இதில் நீண்ட பேசுபொருளாக்கி தன்னை இந்த நாவல் விரித்துக்கொள்ளவில்லை. அதை போகிற வழியில் பார்த்துக்கொள்கிறது. மற்றபடி ஒரு இளைஞனின் அக ரீதியிலான கீழ்மைகலிருந்து போலி சிற்றின்பங்களிலிருந்து ஒருவன் தன்னை எவ்வாறு மீட்டு தனக்கான தன்னறத்தை அடைகிறான் என விரிகிறது. அவன் தன்னை கண்டடைந்த தருணம் மிக உணர்வுப்பூர்வமான தருணம். அது நீட்ஷேவின் "The individual has always had to struggle to keep from being overwhelmed by the tribe. If you try it, you will be lonely often, and sometimes frightened. But no price is too high to pay for the privilege of owning yourself" இதை எனக்கு நினைவூட்டியது. உலகத்துக்கு நம்மை
வெளிப்படுத்தி அதன் அடையாளங்களை தரித்துக்கொள்வதைவிட. தன்னை கண்டடைதலே தன்னறமென முடிகிறது. பாலுக்கு எழுத்து கைக்கூடியிருக்கிறது.
ஆயினும் இது எளிமையாக எல்லாராலையும் வாசித்து முடிக்ககூடிய அனுபவத்தைக் கொடுக்கிறது. சமகால சிக்கல்களை குறித்தான எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாதவனுக்கு இந்நாவல் அவனை கண்ணாடி பிம்பம் போல் காண்பித்துவிடும். அதே சமயம் இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக வைத்து பேசவேண்டும் என நினைக்கவில்லை. ருத்ராவின் சிறு வாழ்வனுபவமாக விரிந்தாலும். இது ஒவ்வொரு இளைஞனின் வாழ்வும்தான். சிறிய எளிய ஆனால் தேவையான அழுத்தமான புத்தகம். சரவணன் சந்திரனின் முன்னுரையை படிக்க தவறாதீர்கள்.


Comments

Popular posts from this blog

நிசப்தம்

இந்த வாழ்வின் ஒட்டுமொத்த தேடலும் ஒரு நிரந்தர மௌனத்திற்கான தேடலா என்ன? இங்கே நிரந்தர அல்லது எல்லையற்ற மௌனம் என்பது மரணத்தை குறிப்பதல்ல. அனைத்திற்கும் மேலான பேருரு ஞானம். இங்கே "உரு" என குறிப்பிடும்போது அந்த "வஸ்து" என ஒன்று உள்ளது என்று இருப்புணர்த்தல் பெற்றுவிடுகிறது. ஆனால் தன்னிலையிலிருந்து ஒரு அனுபவம் நிகழாமல் அத்தனை எளிதாய் அந்த 'உரு' என்னவென்பதை புரிந்துக்கொள்ளவோ அல்லது உணர்ந்துக்கொள்ளவோ முடியாது. ஆதலாலேயே அவ்வனுபவத்தை இருப்புணர்த்தி 'உரு' என அழைக்கபடுகிறதேயன்றி அவ்வுணர்வு என்பது மெய்மறந்த கால எல்லையில் மௌனத்துடன் மௌனமாக பகுப்பொன்றே இல்லாத நித்தியத்துடன் கலத்தல் என்றே நினைக்கிறேன்.  பேச்சு, விவாதம், உரை, எழுத்து என எல்லாவற்றின் அந்தம் என்ன? அனுபவத்திலும் பேரனுபவம் என்ன? எல்லா செயலின் விழைவும் நித்தியத்தின் ரசவுணர்தல் என்றாவின், நித்தியம் என்பதே ஒரு வார்த்தைகளற்ற வெளி, மௌனமே புகமுடியாத நிசப்தம், சுழி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பொருத்திக்கொள்ள முடியாத சுழியாவின் எதற்கென்று இவ்வாழ்வு.  ஒருவேலை வாழ்வின் சாரமே எல்லையற்ற நிசப்தம்தானோ. 

அறிமுகம் - ஜெயமோகனுக்கான கடிதம்

வணக்கம். நான் சுரேன் சாத்ராக். ஜெ ( Suren Shathrak J). சென்னையில் பிறந்தேன். UKG வரை அங்கேதான் படித்தேன். பொருளாதார சிக்கல் காரணமாக திருவண்ணாமலைக்கு வந்தோம். இதுவரை நான் கழித்த பெரும்பாலான நாட்கள் இங்கு கழித்தவையே. இன்று அங்கேதான் வசிக்கிறேன். இது ஒருபுறமிருக்கட்டும். இப்போது இதை நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகனுக்கு நான் 04/02/2024 அன்று ஒரு கடிதம் எழுதியனுப்பியிருந்தேன். அதற்கு அவர் மறுமொழி செய்தால் அதையே இந்த தளத்தின் முதல் பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். ஆனால் அவருக்கு வேலைப்பளு அதிகமிருக்கலாம். அல்லது அவருக்கு இது சென்று சேராமலிருந்திருக்கலாம். ஆனால் துவங்கி ஒரு மாதமாக இந்த தளம் அமைதியாகவே கிடக்கிறது. அதனால் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தையே முதல் பதிவாக பதிவிடுகிறேன். இதிலேயே என்னைக்குறித்தான சிறு அறிமுகமும் உள்ளது. ஜெயமோகன் எப்போது மறுமொழி செய்தாலும் இதிலேயே மீண்டும் திருத்தி பதிவிடப்படும். மறுக்கடிதம் வராமல் இருக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  ஜெயமோனுக்கான கடிதம்    நான் உங்கள் தளத்தை கடந்த மூன்று வருடமாக படித்து வருகிறேன். பல ச...

இனிய சந்திப்பு

பொதுவாக எனக்கு கைப்பேசி தட்டச்சில் நிறைய எழுத்துப் பிழைகள் வரும். மீ்ண்டும் படித்துப்பார்த்தாலும் பிழைகள் கண்களுக்கு படாது. பிழைகளுடனே ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மீண்டும் சரி செய்தும் அனுப்பினேன். அவர் கண்ணில் பிழையானது பட்டுவிட்டது. பரவாயில்லை. கடிதத்தின் மறுமொழிக்காக காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. எப்போதும் ஐயாவின் பதிவுகள் பன்னிரண்டு மணி முடிந்தவுடன் டான் என்று வந்துவிடும். தினமும் படித்துவிடுவேன். இன்று 10/03/2024 என் கடிதத்திற்கான மறுமொழி வந்தது. திருவண்ணாமலை புத்தகத் திருவிழாவில் பவா மற்றும் எஸ்.கே.பி கருணா அவர்களின் உரையை கேட்டு முடித்துவிட்டு அண்ணாசாலையில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு தேநீர் அருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றோம். தேநீரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தரையிலிருந்து ஒரு கையளவே மேலேறியிருந்த திட்டில் அமர்ந்து ஜெ தளத்திலிருந்து வந்த மணிச் சத்தத்தை கேட்டு உள்ளே சென்ற எனக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி இது. அது அவரின் மறுக்கடிதம். தொடர்ந்து அவருடன் உரையாட நினைப்பதால் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கடிதம். ஆச்சரியம் என்னவென்றால் இன்றுதான் ...